|
|
| தடுப்பு முகாம் மக்களை மறந்துவிட்டு, பௌத்த சிங்கள-தமிழ் புத்தாண்டினை முழு நாடும் கொண்டாடுகிறது |
| [ வெள்ளிக்கிழமை, 16 ஏப்ரல் 2010, 08:44 GMT ] [ தி.வண்ணமதி ] |
30 வருடகாலப் போர் முடிவுக்கு வர, மலர்ந்திருக்கும் சமாதானத்தினைக் கொண்டாடும் வகையில் பாரம்பரிய பௌத்த சிங்கள-தமிழ் புத்தாண்டு தேசிய விடுமுறை நாளாக நாட்டினது தலைநகர் கொழும்பில் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆனால், வடக்கில் 83,000 க்கும் அதிகமான தமிழ்ப் பொதுமக்கள் தடுப்பு முகாம்களில் தொடர்ந்தும் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
30 ஆண்டு காலப் போரின் பின்னர் ஓர் அமைதியான சூழமைவில் நாட்டினது பௌத்த சிங்களவர்களும் இந்து மதத்தினைப் பின்பற்றும் தமிழர்களும் தங்களது புத்தாண்டினைக் கொண்டாடியுள்ளார்கள்.
விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையே மே 2009 வரை இடம்பெற்ற கொடூரமான மோதல்களின் திகில் அனுபங்களைச் சுமந்து நிற்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் புதிதோர் சூழமைபில் புத்தாண்டினை எதிர்கொள்கிறார்கள்.
கிறீஸ்தவர்கள், முல்லீம்கள் உள்ளிட்ட நாட்டினது ஏனைய சமூகத்தவர்களும் இந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் பங்கெடுத்தார்கள். ஆனால், வடக்கிலுள்ள தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் 83,000 க்கும் அதிகமான தமிழ் பொதுமக்களுக்கு இந்தப் புத்தாண்டும் துன்பம் நிறைந்ததாகவே அமைந்திருக்கிறது.
'கடந்த 10ஆண்டு காலத்தில் புத்தாண்டிற்காக நான் விடுமுறையில் வீட்டுக்குச் செல்வது இதுவே முதன்முறை' என கமல் குமார கங்கந்த என்ற படைவீரர் கூறுகிறார். 'விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் எதுவுமின்றி சிங்கள-தமிழ் புத்தாண்டினைக் கொண்டாடுவதில் நாம் மகிழ்வடைகிறோம்' என அவர் தொடர்ந்தார்.
நாட்டில் நிரந்தர சமாதானம் நிலைக்கவேண்டும் என வேண்டி இந்து ஆலயங்களிலும் பௌத்த கோவில்களிலும் ஏன் கிறிஸ்தவ தேவாலயங்களிலும் புத்தாண்டு நாளில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றிருக்கின்றன.
நாட்டினது அனைத்து இன மக்களதும் நலனுக்காகவும் அவர்களது அமைதிக்காகவும் இறைவனைப் பிராத்திப்பதாக புத்தாண்டு நாளில் இடம்பெற்ற சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்ட பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
எது அவ்வாறிருப்பினும் நாட்டினது வடக்குப் பகுதியிலுள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தொடர்ந்தும் அடைக்கப்பட்டிருக்கும் 83,000 தமிழர்களது வாழ்வில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் எதுவிதமான மாறுதல்களையும் ஏற்படுத்திவிடவில்லை.
விடுதலைப் புலிகளின் மீதான இறுதி யுத்தத்தினை அரச படையினர் முடுக்கிவிட, சனவரி 2009ம் ஆண்டு முதல் இடம்பெயர்ந்த இந்த மக்களை சிறைக் கைதிகள் போலவும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் போலவுமே அரசாங்கம் கருதிச் செயற்பட்டு வருகிறது.
மீளக்குடியேறுபவர்கள் தங்களது வதிவிடங்களைத் திருத்தியமைப்பதற்கு வழங்கப்படும் 25,000 ரூபாய் பணத்தினைத் தொடர்ந்தும் வழங்குவதற்குப் போதிய நிதி அரசாங்கத்திடம் இல்லை என அகதிகளுக்கான ஐ.நாவின் உயர் ஆணையம் கூறுகிறது.
போர் மேகங்கள் அகன்ற, அமைதியானதொரு சூழலில் புதுவருடம் கொண்டாடப்படுகிறது என்ற தோற்றப்பாட்டினை அரசியல் வாதிகளும் ஊடகங்களும் ஏற்படுத்தி வருகின்றன என National Fisheries Solidarity Movement என்ற அமைப்பின் பொறுப்பாளரும் கத்தோலிக்க மதத் தலைவருமான கேமன் குமார தெரிவிக்கிறார்.
'நாங்கள் எல்லோரும் ஒரு தேசியத்தினைச் சேர்ந்த மக்களே என்பதை மனதிற்கொண்டு செயற்படுவதற்கு நாம் தவறிவிட்டோம். மரங்களின் கீழ் வாழும் அந்த மக்களையும் எங்களது நாட்டினது குடிமக்களாக நாம் ஏற்றுக்கொள்ளவில்லை? அவர்களையும் எங்களில் ஒருவராக நாம் ஏன் கருதிச் செயற்படக்கூடாது? என்கிறார்' கேமன் குமார.
'சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையேயான இன நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்குகான ஒரு சிறந்த சந்தர்ப்பத்தினை சிங்கள தமிழ் புத்தாண்டு ஏற்படுத்தித் தந்திருக்கிறது. வெறும் வெற்று வார்த்தைகளை மாத்திரம் வெளியிடாது, இன நல்லிணக்கம் என்ற பாதையில் பொறுப்புடன் பயணிப்பதற்கு அரசியல் தலைமைகள் தவறிவிட்டன' என கிறிஸ்தவ மதகுருவான அன்ரனி கூறுகிறார். |
|
|