|
|
| உல்லாச விடுதிகளல்ல மருத்துவமனைதான் முதலில் வேண்டும்: யாழ்ப்பாண மக்கள் குமுறல் |
| [ செவ்வாய்க்கிழமை, 20 ஏப்ரல் 2010, 07:07 GMT ] [ தி.வண்ணமதி ] |
எப்போதுமே மக்கள் நிறைந்து வழியும் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் குடாநாட்டின் ஏனைய வைத்தியசாலைகளையும் உடனடியாகத் தரமுயர்த்த வேண்டிய அவசிய தேவையுள்ளது என யாழ். குடாநாட்டு மக்களும் அப்பிரதேசத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூறுகிறார்கள் என கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.
போருக்குப் பின்னான மீள்கட்டுமானப் பணிகள் மற்றும் உல்லாசப் பயணத்துறையினைக் குடாநாட்டில் மேம்படுத்தும் திட்டங்களுக்குத் துணையாக யாழ்ப்பாணத்திலுள்ள மருத்துவமனைகளைத் தரமுயர்த்தும் விடயத்தில் கொழும்பு ஆட்சியாளர்கள் உடனடிக் கவனம் செலுத்த வேண்டுமென குடாநாட்டு மக்கள் கோரி உள்ளார்கள்.
'யாழ் குடாநாட்டில் சர்வதேச தரத்திலமைந்த விடுதிகளை அமைக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது சிறந்ததொரு அம்சமே, ஆனால் குடாநாட்டில் திருப்திதரும் வகையில் அமைந்த மருத்துவ வசதிகள் இல்லையேல் உல்லாசப்பயணிகள் எங்கு செல்வார்கள்' என 70 வயதுடைய ஓய்வுபெற்ற அரச ஊழியரான தணிகாசலம் ராமச்சந்திரன் கொழும்பு ஆங்கில ஊடகத்திடம் கூறியுள்ளார்.
உதாரணமாக, கொழும்பின் பொறளைப் பகுதியில் அமைந்திருக்கும் றிச்வே மருத்துவமனைக்கு நிகராக, யாழ் போதனை வைத்தியசாலையின் 11ம் 12ம் இலக்க சிறுவர் விடுதிகளும் தரமுயர்த்தப்படவேண்டும் என அவர் கூறுகிறார்.
30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்த போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட 1,300 படுக்கைகளைக் கொண்ட யாழ் போதனா வைத்தியசாலைதான் குடாநாட்டிலுள்ள ஒரே ஒரு அளவில் பெரிய மருத்துவமனை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
குடாநாட்டின் 650,000க்கும் அதிகமான மக்களுக்கென இருக்கும் ஒரேயொரு அளவில் பெரிய மருத்துவமனையும் இதுதான்.
குடாநாட்டின் முதன்மையான இந்த மருத்துவமனையினை அபிவிருத்தி செய்யும் வகையில் அண்மைய மாதங்களில் சுகாதார அமைச்சு பல முனைப்புக்களை எடுத்திருப்பதாக மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் எஸ்.பவானந்தன் கூறுகிறார்.
மருத்துவமனையின் சேவையினை மேலும் மேம்படுத்தும் வகையில் தென்பகுதியிலிருந்து 50 தாதியர் அனுப்பப்பட்டிருப்பதாகவும் நரம்பியல் பிரிவு கூடியவரைவில் திறக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
போதனா வைத்தியசாலையில் தற்போது 32 மருத்துவர்கள் பணியாற்றுவதாகவும் மருத்துவமனையின் மனிதவளத்தில் எந்தவிதமான குறைபாடோ தட்டுப்பாடோ இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் 28 இறுதியாண்டு மாணவர்களும் மருத்துவமனையின் மருத்துவர் குழுவுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.
யப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியின்கீழ் மூன்று பில்லியன் ரூபா செலவில் யாழ்ப்பாண மருத்துவமனையின் புதிய கட்டடத் தொகுதியினை நிர்மாணிக்கும் பணிகள் கூடியவரைவில் ஆரம்பிக்கப்பட இருப்பதாக மருத்துவர் பவானந்தன் கூறுகிறார்.
ஆய்வுகூடத் தொகுதி, கதிரியக்க பரிசோதனைத் தொகுதி [Radiological Diagnosis Department], சத்திரசிகிச்சைக் கூடம், அவசர சிகிச்சைப் பிரிவு, மத்திய விநியோகப் பகுதி மற்றும் தொற்றுநீக்கும் பகுதி ஆகியவற்றை இந்தப் புதிய கட்டடத்தொகுதி தன்னகத்தே கொண்டிருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்து நோயாளர்களின் துன்பங்களைப் போக்குவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தவறிவிட்டதாக கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்.
வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் வடக்கின் அபிவிருத்தியினை நோக்கிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் பரப்புரை செய்கின்ற போதும் குடாநாட்டின் சுகாதாரத்துறை தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்துகிறார்.
தற்போதைய சூழமைவில் குடாநாட்டில் உல்லாச விடுதிகளை அமைப்பதை விட மருத்துவமனைகளைப் புனரமைக்கவேண்டியதே மிகவும் முதன்மையானது என பிரேமச்சந்திரன் சுட்டிக் காட்டுகிறார்.
குடாநாட்டின் சுகாதாரத்துறையின் தரத்தினை உயர்த்தும் வகையில் அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தரத்திற்காவது யாழ் போதனா வைத்தியசாலை தரமுயர்த்தப்படவேண்டும் என்கிறார் அவர்.
கோப்பாய், மூளாய் மற்றும் மந்திகை மருத்துவமனைகளும் உடனடியாகக் கவனம் செலுத்தப்பட்டவேண்டும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறுகிறார். |
|
|