|
|
| கனேடிய வருமான வரித்துறை இரண்டு இந்துக் கோவில்களிடமிருந்து தண்டப்பணம் அறவிட்டது |
| [ வெள்ளிக்கிழமை, 08 யூன் 2012, 11:30 GMT ] [ நித்தியபாரதி ] |
2004ல் இந்துசமுத்திரத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலையை அடுத்து, சிறிலங்காவில் செயற்பட்ட புலிகள் அமைப்பின் ஆதரவு நிறுவனம் ஒன்றுக்கு நிதி அனுப்பிய குற்றச்சாட்டின் பேரில் கனேடிய வருமான அமைப்பானது இரு இந்துக் கோவில் நிர்வாகத்தினரிடம் தண்டப் பணம் அறவிட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட Richmond Hill இந்து ஆலயம் மற்றும் Hindu Mission of Mississauga ஆகிய இரண்டு தொண்டு அமைப்புக்களிடமிருந்தும் 140,000 டொலர்கள் மற்றும் 300,000 டொலர்கள் நிதி தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாக கனேடிய வருமான அமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் 'ஆதரவு அமைப்புக்களில் ஒன்றாகக்' கருதப்படும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு பல ஆயிரக்கணக்கான டொலர்கள் நிதியை இவ்விரு இந்து ஆலயங்களும் வழங்கியிருந்ததாக சமஸ்டி நிர்வாக தொண்டர் அமைப்புக்களின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
"விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புபட்ட நிறுவனம் ஒன்றின் ஊடாக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இவ்விரு இந்து ஆலயங்களும் தமது பதிவு செய்யப்பட்ட வளங்களை வழங்கியமையானது மிகப் பிழையான செயற்பாடாகும்" என இந்து ஆலயங்களுக்கு தொண்டர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் எழுதப்பட்ட கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.
2004ல் சிறிலங்காத் தீவின் கரையோரங்களைப் பாதித்த ஆழிப்பேரலை அனர்த்தத்தை தொடர்ந்து இவ்வாறு பெருமளவான நிதி சேகரிக்கப்பட்டு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு அனுப்பி வைத்தமையைக் காரணங்காட்டியே தற்போது இவ்விரு கனேடிய ஆலயங்களிடமிருந்தும் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. கனடாவானது பல்வேறு மனிதாபிமான அமைப்புக்களுக்கும் தன்னாலான உதவிகளை வழங்கிய அதேவேளையில், இவ்விரு இந்து ஆலயங்களும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு நேரடியாக நிதி வழங்கியுள்ளன.
அக்காலப்பகுதியில், தமிழ் சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் சிறிலங்காவின் வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு அனைத்துலக நிதியுதவிகள் சென்றடைவதில்லை என கனடாவில் வாழும் சிறிலங்காத் தமிழர்கள் கருதினர்.
சிங்களப் பெரும்பான்மை மக்கள் வாழும் சிறிலங்காவின் தென் மேற்குப் பகுதிகளை நோக்கியே அனைத்துலக நிதியுதவிகளை சிறிலங்கா அரசாங்கம் பயன்படுத்துவதாக Richmond Hill ஆலயத்தின் செயலர் மனிக் அம்பிகாபதி தெரிவித்துள்ளார்.
"உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழ் மக்கள் சிறிலங்கா அரசாங்கத்தை நம்புவதில்லை. சிறிலங்காவில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் 70 சதவீதமானவை தமிழ் மக்களினுடையதாகும். ஆனால் 80 சதவீதமான நிதி தென்மேற்குப் பகுதியை சென்றடைகின்றது. இது உண்மையில் நியாயமற்ற செயலாகும்" என திரு.அம்பிகாபதி தெரிவித்துள்ளார்.
"தமிழ் மக்களுக்கு உதவி புரிவதை நோக்காகக் கொண்டே தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு நேரடியாக நிதி வழங்கப்பட்டது. தமிழ் மக்களுக்கு முழுமையான நிதி சென்றடைவதற்கான ஒரு வழியாக இக்கழகம் செயற்பட்டது. அந்நேரத்தில் இப் புனர்வாழ்வுக் கழகமானது ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா மற்றும் கனடா ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது" என அம்பிகாபதி மேலும் தெரிவித்துள்ளார்.
ஆனால் தமிழர் புனர்வாழ்வுக் கழகமானது 1990களிலிருந்து புலிகள் அமைப்புடன் நேரடித் தொடர்பைக் கொண்டிருந்ததாகவும், இது தொடர்பாக தெரிந்து கொண்டும் இவ்விரு இந்து ஆலயங்களும் இக்கழகத்துக்கு நேரடியாக நிதியை அனுப்பி வைத்துள்ளதாகவும், தொண்டு அமைப்புக்களின் சம்மேளனத்தால் எழுதப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. புலிகள் அமைப்புடன் தொடர்புடைய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு Richmond Hill ஆலயமானது 2005 மற்றும் 2006 காலப்பகுதியில் 118,000 டொலர்களையும், Mississauga ஆலயம் 85,000 டொலர்களையும் வழங்கியதாகவும் கடந்த திங்களன்று வெளியிடப்பட்ட கனேடிய வருமான அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"விடுதலைப் புலிகளுடன் தொடர்பைப் பேணும் அமைப்புக்களுக்கு நிதியுதவிகளை வழங்குவதை தொண்டாகக் கருதமுடியாது" எனவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"முதலில், தேசம் ஒன்றை புதிதாக உருவாக்கிக் கொள்ளல் மற்றும் அரசியல் தன்னாட்சியைப் பெற்றுக் கொள்ளுதல் போன்றவை உள்ளடங்கலாக அரசியல் நோக்கம் கருதி செயற்படும் அமைப்புக்களுக்கு உதவிகளை வழங்குவதானது தொண்டு அமைப்புக்களுக்காக வரையப்பட்ட சட்டத்தின் கீழ் உள்ளடங்கவில்லை. மேலும், தொண்டு அமைப்பொன்றின் செயற்பாடுகள் அதன் வரையறைகளைத் தாண்டி சட்ட ரீதியற்ற முறையில் செயற்பட்டால் அதனை தொண்டர் அமைப்பாக கருதமுடியாது" எனவும் கனேடிய வருமான அமைப்பால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள தண்டப்பணமானது உண்மையில் நியாயமற்றது என Mississauga ஆலயம் சார்பாக வாதிடும் சட்டவாளரான கரி நேசதுரை தெரிவித்துள்ளார். இவ் ஆலயமானது தனது நிதியை, ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்பு மற்றும் இதர மனிதாபிமான உதவிகளை வழங்குவதை நோக்காகக் கொண்டே சிறிலங்காவுக்கு அனுப்பியிருந்தது எனவும் கரி நேசதுரை மேலும் தெரிவித்துள்ளார்.
"சிறிலங்காவின் வடக்கு, கிழக்கில் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதை பிரதான நோக்காகக் கொண்டே இந்நிதி அனுப்பப்பட்டது. அத்துடன் சிறிலங்கா அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கழகமாகவே இது காணப்பட்டது. ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் முன்னின்று செயற்பட்டதற்காக சிறிலங்கா அரசாங்கமானது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு விருது வழங்கிக் கௌரவித்திருந்தது" எனவும் சட்டவாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக தற்போதைக்கு மேலதிகமாக வேறெந்த தகவலை வழங்குவதற்கு கனேடிய வருமான அமைப்பு மறுத்துவிட்டது.
செய்தி வழிமூலம் : National Post மொழியாக்கம் : நித்தியபாரதி |
|
|